அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவன் பரிதாப உயிரிழப்பு

Salem News Today: சேலம் அருகே நடந்து சென்ற மாணவன் பேருந்து மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-06-15 07:36 GMT

உயிரிழந்த பள்ளி மாணவன் கவேஸ்.

Salem News Today: சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை கன்னங்குறிச்சி நோக்கி அரசுப்பேருந்து வந்துகொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் ராஜேந்திரன் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே பேருந்து வந்தபோது, அந்த வழியாக நடந்து சென்ற பள்ளி மாணவன் மீது மோதியது. இதில் மாணவன் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த மாணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த மாணவன் கன்னங்குறிச்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளி நடராஜ் மகன் கவேஸ் (வயது 12) என்பதும், இவன் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. மாணவன் நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்றான். அப்போது பள்ளியில் ஜாமண்டரி பாக்சை வைத்து விட்டு வந்து விட்டேன்.

அதை எடுத்து வருகிறேன் என்று தனது தாயார் கவுரியிடம் மாணவன் கூறிச் சென்ற போது பேருந்து மோதி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாணவர்கள், பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளானது.

இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் இருந்த மாணவனின் பெற்றோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர், விபத்து எப்படி ஏற்பட்டது என கேட்டறிந்தார்.

Tags:    

Similar News