விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் கோல்டன் ஹவர்ஸ்: உதவுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு!

விபத்தில் சிக்கியவர்களை உரிய காலத்தில் மீட்க உதவினால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைக்கும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Update: 2024-02-11 06:53 GMT

காட்சி படம் 

கோல்டன் ஹவர்ஸ்' திட்டத்தை பயன்படுத்தி விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10 ஆயிரத்தடன் ரிவார்டுகளை பெற்று கொள்ள திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைக் குறைக்கும் முயற்சியில், தமிழக அரசு ஒரு முக்கியமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது - இது விபத்துக்களுக்கான 'பொன்னான நேரம்' திட்டம் என அழைக்கப்படுகிறது.

சாலை விபத்தில் சிக்கியவருக்கு உடனடி மருத்துவ உதவி அளிக்கப்படும் அந்த முதல் ஒரு மணி நேரமே உயிர் காக்கும் "பொன்னான நேரம்" ஆகும். காயமுற்ற ஒரு நபருக்கு இந்த நேரத்தில் கிடைக்கும் சிகிச்சையானது, அவர்களின் பிழைப்பதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கும்.

உடனடி மருத்துவ உதவி இல்லாததால் ஏற்படும் சாலை விபத்து உயிரிழப்புகளை அந்தந்த மாநிலங்களே ஏற்றுக்கொள்ளும் நடைமுறைக்கு சில மாநிலங்கள் மாறி உள்ளன.

சாலை விபத்துக்களில் அவசரகாலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க "இன்னுயிர் காப்போம்" என்ற பெயரில் புதிய திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சாலை விபத்துகளில் காயமடைந்த நபர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ரூ.1 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டது. இதுபோன்ற மனிதாபிமானமிக்க ஒரு திட்டத்தை அறிவித்த பெருமை தமிழக அரசுக்கே உரியது.

பொதுமக்கள், விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று அனுமதித்த உடன் அம்மருத்துவமனைகள் அரசுக்கு தெரியப்படுத்தலாம்.

விபத்து நிகழ்ந்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேரத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான ( ரூபாய்.ஒரு இலட்சம் வரை) மருத்துவ செலவை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். உலகிலேயே இதுபோன்றதொரு மனிதாபிமானம் மிக்க திட்டத்தை தீட்டியது தமிழக அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாகன பயன்பாடுகள் அதிகமாக இருப்பதால் விபத்துக்களும் அதிகளவில் நடக்கின்றன. விபத்துகள் நடக்கும் நேரங்களில் அதை பார்ப்பவர்களில் சிலர் உதவி செய்கின்றனர். சிலர் காவல்துறை வழக்கு வந்து விடுமோ என்ற எண்ணத்தில் அந்த இடத்தை விட்டு கடந்து செல்கின்றனர். இதனால் உதவி செய்ய ஆள் இல்லாமல் பலர் விபத்துக்களில் சிக்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது.

விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவதற்காக 'கோல்டன் ஹவர்ஸ்' எனும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. விபத்தில் யாராவது சிக்கியிருந்தால் அருகிலிருப்பவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் பரிசாக ரூ.10 ஆயிரம் வரை இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதை பொது மக்கள் பயன்படுத்தினால் விபத்தில் சிக்கியவரின் உயிரும் காப்பாற்றப்படும். தங்களுக்கும் பரிசு கிடைக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News