மகளிர் குழு கடனுக்கு தனி வங்கிக்கிளை : முன்னோடி வங்கி பொதுமேலாளர் தகவல்

மகளிர்குழுவினர் கடன்பெற தனிவங்கி கிளை துவக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-01-08 08:00 GMT

ராணிப்பேட்டையில் பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த தாமரைபாக்கம் ஊராட்சியில் மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம்  சார்பில் கொரோனா தடுப்பூசி, தூய்மை இந்தியா, ரொக்கமில்லா  பரிவர்த்தனை, மற்றும் பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு ,தாமரைப்பாக்கம் கிராம ஊராட்சி தலைவர் மலர்க்கொடி முன்னிலை வகித்தார்.திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக் தலைமைதாங்கி, ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசின் சார்பில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கினார்.

பின்பு அவர் பேசும்போது, கொரோனா பரவி வருகிறது. அனைவரும்  தடுப்பூசி முகாம்களில் தவறாமல் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளவேண்டும். அதில்  15 முதல் 18 வயது வரை உடைய மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் தங்கள் பிள்ளைகளை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அதற்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட  மாவட்ட முன்னோடி  வங்கி பொது மேலாளர் ஆலேயம்மா ஆபிரகாம் பேசியதாவது:

மத்திய அரசின் சார்பில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும்  10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான  செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும். மேலும் மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலன் கருதி பல்வேறு காப்பீடு திட்டங்களும் ஓய்வூதிய திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆண்டுக்கு 12 ரூபாய்,செலுத்தும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு திட்டம்,மற்றும் ஆண்டுக்கு ரூபாய் 330 செலுத்தும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி, பீமா யோஜனா காப்பீடு திட்டங்களில் பொது மக்கள்  இணைந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு சிறு தொழில்கள் துவங்க இந்தியன் வங்கி சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில்18 வயது முதல் ஆண்,பெண் இருபாலரும் இலவசமாக அளிக்கும்  பயிற்சியில் சேர்ந்து பயன் பெறவேண்டும்.  ராணிப்பேட்டை மாவட்டத்தில்  உள்ள மகளிர் குழுவினர் கடன் உதவிகளை பெறுவதற்கென்றே தனி வங்கிக் கிளை  இராணிப் பேட்டையில் துவக்கப்பட்டுள்ளது. அதனை மகளிர் குழுவினர் பயன்படுத்திக்கொண்டு பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

அவரைத்தொடர்ந்து முதியோர்களுக்கான தேசிய உதவி எண் மைய தொடர்பாளர் சுந்தரமூர்த்தி  பேசும்போது, ஆதரவற்ற முதியோர்கள் 1 4 5 6 7 என்ற இலவச என்னை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளையும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கொரானா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி ஆகியன நடந்தன.

இந்நிகழ்ச்சியில்,தொடர்பு கள அலுவலர் ஜெயகணேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அருண்குமார், வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம்,  ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரமேஷ், தாமரைப்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் குமார்,ஊராட்சி செயலர் சாமிநாதன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News