சாலையோர குடித்தனம்; சமைக்க வழியின்றி பட்டினி கிடக்கும் அவலம் .

ரத்தினகிரி கீழ்மின்னலில் கல்லுடைக்கும் தொழிலாளிகள் வீடின்றி சாலையோரம் கூடாரத்தில் தங்கி உணவு சமைக்க வழியின்றி பட்டினி கிடக்கின்றனர் .

Update: 2021-11-08 12:10 GMT

பிளாஸ்டிக் கூரை அமைத்த குடிசைகளில் வாழும் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் 

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை தாலூக்காவைச் சேர்ந்த கீழ்மின்னல் பஞ்சாயத்தில் உள்ள இரத்தினகிரி பகுதியில் சுமார 25 ஆண்டுகளுக்கும் மேலாக 30க்கும் மேற்பட்டோர் கல்லுடைக்கும் தொழில்செய்து வருகின்றனர் .

அப்போதிலிருந்து, அவர்கள் தங்க வீடுகளின்றி சாலையாரத்தில் பிளாஸ்டிக் பாய் மூலம் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதார்அட்டை, குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களுக்கு வீட்டுமனைகள் இல்லாமல் சாலைகளில் வசித்து வருகின்றனர்.

இது தொடரபாக அவர்கள் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு தொடர்ந்து  கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது

இதுகுறித்து அங்கு வசித்து வருபவர்கள் கூறும்போது,  கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக மழை, புயல்,வெயில் போன்ற எல்லாக் காலங்களில் தினமும் சாலையோரம் ஏதாவது ஒரு வண்டி எங்கள் மீது ஏறி விடுமோ பயத்திலேயே வாழ்ந்து வருகிறோம். தற்போதுள்ள மழைக்காலத்தில் குழந்தைகளுடன் தங்குவதற்கு இடம் இல்லாமல் இருக்கிறோம்.  குழந்தைகளுக்கு உணவு செய்து தருவதற்கு கூட இங்கு எங்கும் காய்ந்த இடம் கிடைக்காததால், காலை முதல் பட்டினியாகவே உள்ளதாகவும் இந்த நிலை  தங்களுக்கு கடந்த  25 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருவதாக தெரிவித்தனர்

இதுபோன்ற மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான பகுதியில் இருக்கும்படி அறிவுறுத்தும் மாவட்ட நிர்வாகம் தங்களைப் போன்றோரை கண்டு கொள்வதில்லை என மிகுந்த  மன வேதனையுடன் தெரிவித்தனர்

எனவே தங்களைப் போன்ற தங்குவதற்கு  இடமின்றி தவிக்கின்றவர்களுக்கு  வீட்டுமனை வழங்கி உதவிட வேண்டுமென   கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News