பத்திரப்பதிவுக்கு லஞ்சம் வாங்கிய கலவை சார்பதிவாளர் பணியிடை நீக்கம்

கலவையில் பத்திரப் பதிவுக்கு 20000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர்: சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பணியிடை நீக்கம்

Update: 2021-05-27 08:39 GMT

பத்திரப்பதிவுக்கு லஞ்சம் வாங்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கலவை சார்பதிவாளர் 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திர பதிவு செய்ய சார்பதிவாளர் ரமேஷ் தனது இடைத்தரகர் மூலம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம்(60). விவசாயியான இவருக்கு அதே பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வராஜ், முனிசாமி, ரகுநாதன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தனது பூர்விக சொத்தான 10 செண்ட் அளவு வீட்டை, அவரது 3 மகன்களுக்கும் சரிசமமாக பங்கிட்டு தர முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர், கடந்த மாதம் 31ஆம் தேதி கலவையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போது, நிலத்தை பார்வையிட்டு பதிவு செய்து கொடுக்க மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணமாக சார்பதிவாளர் ரமேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதற்கு முன் பணமாக பத்தாயிரம் ரூபாயை அவரது அலுவலகத்தில் இடைத்தரகர் வேலு என்பவர் மூலமாக பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து 5 நாட்களில் நிலத்தை அளவிட்டு பத்திரத்தை தயார் செய்த சார் பதிவாளர் ரமேஷ், மீதமுள்ள லஞ்சப்பணத்தை கொடுத்து விட்டு பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்த பணத்தை அலுவலக உதவியாளர் சார் பதிவாளர் ரமேஷ் அறையில் இடைத்தரகர் வேலு, பெற்றுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இது தொடர்பாக பத்திர பதிவு துறை ஐஜி சங்கர் உத்தரவின் பேரில் வேலூர் மண்டல டிஐஜி ஜனார்தனன் விசாரணை நடத்தினார். இதில் சார்பதிவாளர் ரமேஷ் பத்திர பதிவு செய்ய லஞ்சம் பெற்றது நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மண்டல டிஐஜி ஜனார்தனன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News