போலி ஆணை மூலம் விஏஓ பணியில் சேர முயன்றவர் கைது

Update: 2021-03-17 05:00 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விஏஓ., பணி ஆணை பெற்று பணிக்கு வந்த இளைஞர் மற்றும் அவரது தந்தை, தாய் என மூன்று பேரை கைது செய்ததால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டாசியர் அலுவலகத்தில் காட்பாடி வலவன்குட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத் (23) என்பவர் விஏஓ., பணியில் இணைய அரசு பணி நியமன ஆணையை கொண்டு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சியிடம் ஒப்படைத்து பணிக்காக காத்திருந்தார்.அரசு பணி நியமன ஆணையை பார்த்த வட்டாட்சியர் காமாட்சிக்கு அந்தப் பணி நியமன ஆணை போலியானது என சந்தேகம் எழுந்தது. இதனால் வட்டாசியர் காமாட்சி, கோபிநாத் அவரது தந்தை பழனி, அவரது தாய் சத்தியா ஆகியோரை ராணிப்பேட்டை சப்கலெக்டர் இளம்பகவத்திடம் அழைத்துச் சென்று விசாரனை மேற்கொண்டனர்.

விசாரணையில் கோபிநாத் கொண்டு வந்த அரசு பணி நியமன ஆணை போலி என தெரியவந்தது. இதனையடுத்து கோபிநாத்தின் தந்தை பழனி மற்றும் தாய் சத்யாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரிடம் ரூபாய் 5 லட்சம் கொடுத்ததாகவும் அவர் தான் இந்த பணி நியமன ஆணையை தயார் செய்து தந்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இதனையடுத்து பணி நியமன ஆணை பெற 5 லட்ச ரூபாய் கொடுத்த குற்றத்திற்காக கோபிநாத்,அவரது தந்தை பழனி மற்றும் தாய் சத்தியா ஆகியோரை கைது செய்ய போலீசாருக்கு ராணிப்பேட்டை சப்கலெக்டர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆற்காடு போலீசார் இவர்கள் மூவரையும் கைது செய்தனர். மேலும் 5 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு போலி அரசு பணி நியமன ஆணை வழங்கிய காட்பாடி அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News