மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்நிலைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்

நீர்நிலை பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2021-11-05 16:34 GMT

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதை முன்னிட்டு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்புலியூர் ரைஸ்மில் ஓடை,ஆலமரத்து ஓடை மற்றும் ஆலம்பாடி ஊராட்சி செஞ்சேரி முனியன் குளம் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் போர்கால அடிப்படையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்திட ஏதுவாக மாவட்டத்தின் அனைத்துப்பகுதியிலும் உள்ள சமுதாயக்கூடங்கள், பள்ளிக்கட்டடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என 67 இடங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் கொண்ட கட்டடங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் ஏரி,குளங்கள் விரைவாக நிரம்பி வருவதாலும் உபரி நீர் வெளியேறி ஓடை, ஆற்றுப்பகுதி போன்ற நீர்வழித்தடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. காட்டாறுகளில் வெள்ளம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் அதன் வேகத்தினை கணிக்க இயலாத காரணத்தால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நீர்நிலைகளை பார்வையிடவோ அருகில் செல்லவோ வேண்டாம். பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக கவனித்துக்கொள்ள வேண்டும். மரம் மற்றும் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம். ஓட்டு வீடு, குடிசை வீடு, மற்றும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக தங்கிக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்கள் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள (04328)1077, 1800 425 4556, என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களையும் மற்றும் 9445000458, 7402607785, 9384056223 என்ற அலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும், மேலும் வடகிழக்கு பருவமழை மழைக்காலத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவற்றை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதாகவும், மக்கள் அச்சபடத் தேவையில்லை எனவும், மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்தார்.

இந்த ஆய்வில் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News