பெரம்பலூர்: ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர்வதற்கு அழைப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர்வதற்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2021-11-25 03:43 GMT

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெரம்பலூர்  மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 3 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதியும் என ஆக மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இவ்விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும், மேலும் இலவசமாக 4 இணைச் சீருடைகளும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும். இவ்விடுதிகளில் சேருவதற்கு மாணவ மாணவியர்களின் பெற்றோர் அல்லது அவர்களுடைய பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- மிகாமல் இருக்க வேண்டும்.

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாணவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கும்; பள்ளிக்கும் இடைவெளி 5-கி.மீ க்கு மேல் இருக்க வேண்டும். மாணவியர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் 30.11.2021 மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி, நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர், மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News