ஊட்டி மலை ரயிலில் பயணிக்க விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விடுமுறை நாளான இன்று ஊட்டி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.;
ஊட்டி மலை ரயிலில் பயணிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக உதகை மலை ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி முதல் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
தினமும் உதகை-குன்னூர் இடையே 3 முறை, மேட்டுப்பாளையம்- உதகை இடையே ஒரு முறை இயக்கப்படுகிறது.
வார நாட்களான திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது.
இதனால் இருக்கைகள் நிரம்பாமல் வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளி மலை ரெயிலில் அனைத்து இருக்கைகளும் நிரம்புகிறது.
இதனால் சிலருக்கு டிக்கெட் கிடைக்காமல் போகிறது. இந்நிலையில் உதகை ரெயில் நிலையத்தில் மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
உதகை-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயிலில் செல்லும் போது குகைகளை கடப்பது, பசுமையான தேயிலை தோட்டங்கள், அடர்ந்த வனப்பகுதிகள் போன்றவற்றை கண்டு ரசித்தனர்.
காட்சிக்கு வைக்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயில் நீராவி என்ஜினை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகளுக்காக மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 6-ந் தேதி முதல் இதுவரை 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணம் செய்து உள்ளனர் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.