குன்னூர் சாலையில் யானைகள் முகாம்

ஊடரங்கால் வெறிச்சோடிய சாலைகளில் பலாப்பழம் உண்ட யானைக் கூட்டம் ஆக்ரோஷமாக வாகனங்களை துரத்தியது.

Update: 2021-05-25 15:55 GMT

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன நடமாட்டம் இல்லாததால் சாலை நடுவே நின்று பலாப்பழம் சாப்பிட்ட காட்டு யானைக் கூட்டம் ....

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலைப்பாதையில் வாகன போக்குவரத்து 80 சதவீதம் குறைந்துள்ளது.

காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனம் மட்டும் சென்று வரும் நிலையில், இன்று மாலை மேட்டுப்பாளையம் - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே உள்ள மலைப்பாதையில் இரண்டு குட்டிகளுடன் காட்டுயானைகள் சாலையின் நடுவே நின்று பலாப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை பார்த்த காட்டு யானைகள் குட்டியுடன் வாகனத்தை விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சில மணி நேரம் அப்பகுதியில் நின்ற காட்டுயானை கூட்டம், மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அப்பகுதியில் தற்போது பலாப்பழ சீசன் என்பதால் காட்டு யானைகள் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் முகாமிட்டு இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News