நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு எதிராக சின்ராஜ் எம்.பி. தர்ணா போராட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு எதிராக சின்ராஜ் எம்.பி. இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-07-11 06:15 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சின்ராஜ் எம்.பி. இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மக்கள் பிரச்சினை சம்பந்தமாக மாவட்ட கலெக்டரை சந்திக்க முடியவில்லை எனக் கூறி, எம்.பி. சின்ராஜ் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மோகனூர் ஊராட்சி ஒன்றியம் லத்துவாடி பஞ்சாயத்து தலைவர் மீது புகார்கள் வந்ததன் பேரில், லத்துவாடி பஞ்சாயத்து அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கடந்த வாரம், நாமக்கல் லோக்சபா எம்.பி சின்ராஜ், லத்துவாடிக்கு சென்றார். அப்போது பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து ஆவணங்களை தனது அலுவலகத்தில் வைத்துப்பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். அங்கிருந்த பஞ்சாயத்து செயலாளரிடம் எம்.பி சின்ராஜ் இது குறித்து கேட்டபோது, தன்னிடம் பஞ்சாயத்து சம்பந்தமான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய எம்.பி. சின்ராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு லத்துவாடி பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுவரை பஞ்சாயத்து தலைவர் மீது கலெக்டர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சின்ராஜ், கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மக்கள் பணி செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். நாமக்கல் பகுதியில், மக்கள் பிரச்சினை நிறைய உள்ளது. அது குறித்து மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து பேச முடியவில்லை, அதனால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். கொ.ம.தே.க. எம்.பியான சின்ராஜ் கடந்த தேர்தலில் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஒரு ஆளுங்கட்சி எம்.பி.யே கலெக்டரை சந்திக்க முடியாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது கலெக்டர் அலுவலகத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News