சீர்காழி அருகே வி.ஏ.ஓ. இடமாற்றத்தை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்

சீர்காழி அருகே வி.ஏ.ஓ. பணி இடமாற்றத்தை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-12-15 11:39 GMT
சீர்காழி அருகே வி.ஏ.ஓ. பணி இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்  போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவகுடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் திம்மராசு. இவர்மீது அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் சொந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் வள்ளுவக்குடியில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் திம்மராசுவை வேறு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்து வருவாய்த் துறையின் சார்பாக உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வள்ளுவக்குடி கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலரை தங்கள் கிராமத்திலேயே தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்க கோரியும் பணி இடமாற்றத்தை ரத்து செய்ய கோரியும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொண்டல் -சீர்காழி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணலாம் என உறுதியளித்தனர். இதனை ஏற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்

Tags:    

Similar News