சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதிய விபத்தில் இருவர் பலி

சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் பலியானார்கள்.

Update: 2022-04-15 15:07 GMT

சீர்காழி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில்  இருவர் பலியானார்கள்.

திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் பதர் நிஷா (வயது 72 )இவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காக இன்று காலை வாடகை காரில் சென்று கொண்டிருந்தார். திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசந்தர் (44) என்பவர் காரை ஓட்டிச் சென்றார்.

சீர்காழி அருகே நடராஜ பிள்ளைச்சாவடி அடுத்த ஆலங்காடு பகுதியில் சாலையோரம் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் சீர்காழி நோக்கி வந்த டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னே நின்ற காரின் மீது மோதி சில அடி தூரம் இழுத்துச் சென்று ஒரு வீட்டின் சுவற்றை உடைத்து காரின் மீது லாரி ஏறி நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பதர்நிஷா, கிருஷ்ணசந்தர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரின் மீது லாரி ஏறி கார் உருக்குலைந்து நின்றதால் காரினை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி வாகனம் மற்றும் கடப்பாரையால் வெட்டி அகற்றி எடுத்தனர்.காரில் உருக்குலைந்து சிக்கியிருந்த உடல்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.திருவெண்காடு போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. நிஷா  சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினார். இந்த விபத்தினால் நாகை- சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது .

Tags:    

Similar News