தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றச்சாட்டி உள்ளார்.

Update: 2022-04-20 07:25 GMT

சீர்காழியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திருமாவளவன் எம்.பி.  பயனாளர்களுக்கு தென்னங்கன்று வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம் பி. செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த உருவாக்க பார்க்கிறார்கள். பாஜகவினர் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர். அனைத்து தரப்பினராலும் பாராட்டப் படக்கூடிய அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என திட்டமிடுகின்றனர். பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்த அதி தீவிர மதவாத சக்திகளை ஆளுநராக நியமித்து வருகின்றனர். அவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினை உறுதிப்படுத்துவதற்கு பா.ஜ.க. அரசு முயல்கிறது.

அந்த அடிப்படையில்தான் எச்.ராஜா கேரள ஆளுனராக நியமிக்கப்பட்டதை பார்க்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் வேண்டுமானால் எச்.ராஜா வாயில் வந்ததை பேசி திரியலாம். கேரளாவில் மெத்த படித்தவர்கள் உள்ளனர் இடதுசாரி சிந்தனையாளர்கள் அதிகம்.  அங்கு அவரது பேச்சு எடுபடாது. இலங்கைக்கு இந்திய அரசு ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாயை உதவிகளை செய்துள்ளது. அந்த உதவிகள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமையாக கிடைப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் கண்காணிக்க வேண்டும். இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளது அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

Tags:    

Similar News