சீர்காழியில் சமூக விரோதிகளின் கூடாரமான பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகம்

சீர்காழியில் சமூக விரோதிகளின் கூடாரமாக பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகம் மாறி உள்ளது.

Update: 2022-02-01 02:13 GMT

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய சீர்காழி பழைய வட்டாட்சியர் அலுவலகம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்,கருவூலம்,வட்ட வழங்கல் துறை,சார் பதிவாளர் அலுவலகம், நில அளவை பிரிவு என அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கி வந்தது.இந்த கட்டிடம் ஆங்கிலேயர் கால பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து அலுவலகங்களும் தற்காலிக இடமாற்றம் செய்யபட்டது.ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்தும் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்படவில்லை.நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட காலதாமதத்தால் இத்திட்டம் கிடப்பில் போடபட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்காலிக வட்டாட்சியர் அலுவலகம் பழுதடைந்த தனியார் திருமண மண்டபத்தில் அடிப்படை வசதி கூட இல்லாமல் இயங்கி வருகிறது.மற்ற அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் வாடகை கட்டிடடத்தில் இயங்குகிறது.பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டிடடங்கள் பழுதடைந்து பயனற்று கிடப்பதை சாதகமாக்கிய சிலர் மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் எஞ்சியுள்ள மற்ற அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களும் அலுவலர்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மேலும் ஒரே இடத்தில் பெற்றுவந்த சான்றிதழ் மற்றும் பதிவுகளுக்கு தற்போது வெவ்வேறு இடங்களுக்கு சென்று பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. நேரவிரையமும் அலைச்சலும் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கும் பொதுமக்கள் சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய பழைய கட்டிடடங்களை அகற்றிவிட்டு ஒருங்கிணைந்த வட்டாட்சியர் அலுவலக பணியை விரைந்து துவங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News