குத்தாலம் அருகே 12-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்தவர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் அரசுப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் காலையில் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
பருத்திக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த சுந்தர் என்ற இளைஞர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்துள்ளதாக பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சுந்தரை கைது செய்து அவர் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டம் 2006 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.