ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் மின்சிக்கனத்தை கடைபிடிக்க கோரிக்கை

குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆளில்லாத மேசைக்கு 10க்கம் மேற்பட்ட மின்விசிறிகளை ஓடவிட்ட அலுவலர்கள்.

Update: 2022-05-14 10:30 GMT

யாரும் இல்லாத அலுவலகத்தில் சுழலும் மின்விசிறிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றியகுழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துறை அதிகாரிகள் ஒரு சிலர் சென்றிருந்தனர். இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் போது ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகப்பணியில் ஒருவரை தவிர அனைவரும் வெளியில் சென்றிருந்தனர். அலுவலகப் பணியில் இருந்து வெளியே சென்றவர்கள் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறிகளை நிறுத்தாமல் சென்றதால் 10க்கும் மேற்பட்ட மின்விசிறிகள் ஆளில்லாத அரசு அதிகாரிகளின் அலுவலக மேசைக்கு காற்றோட்டம் அளித்தது.

பொதுமக்களுக்கு நிலக்கரி பற்றாக்குறை, மின்பற்றாக்குறை என காரணம் கூறி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்க வேண்டும். தேவையில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்த கூடாது என அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக அரசு அலுவலகத்தில் பல மின்விசிறிகளை ஓடவிட்டு சென்றது அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மின்சிக்கனத்தைப்பற்றி பேசும் அதிகாரிகள் தாங்கள் வேலை செய்யும் அரசு அலுவலகங்களில் மின்சிக்கனத்தை கடைபிடிக்காதது குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களை ஆதங்கப்படுத்தியுள்ளது. தங்கள் வீடுகளில் மின்விசிரியை ஒடவிட்டு செல்வார்களா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மின்சிக்கனம் என்பது அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்று ஆனால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் மின்சிக்கனத்தை கடைபிடித்தால் மட்டுமே மின்தட்டுப்பாட்டை போக்க முடியும் என்றும் அரசு சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News