கூடுதல் விலைக்கு பச்சைப்பயறு கொள்முதல். மகிழ்ச்சியில் விவசாயிகள்

செம்பனார்கோவில் வேளாண் விற்பனைக்கூடத்தில் வெளிச்சந்தையை விட கூடுதல் விலைக்கு பச்சைப்பயறு கொள்முதல். மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் கொள்முதலை அதிகரிக்க அரசுக்கு கோரிக்கை விடுததுள்ளனர்..

Update: 2021-05-06 06:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வேளாண் விற்பனைக் கூடத்தில் இருந்து நடப்பு ஆண்டு ராபி பருவத்துக்கு, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்கீழ், தேசிய வேளாண் முகமை மூலம் 3000 மூட்டைகள் பச்சைப்பயறு (150 மெட்ரிக் டன்) கிலோ ரூ.71.96க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

செம்பனார்கோவில் வேளாண் விற்பனைக்கூடத்தில் 200 மெட்ரிக் டன் பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கொள்முதல் தொடங்கிய சில நாளிலேயே 150 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் ரூ.62 முதல் ரூ.64 வரை கொள்முதல் செய்யப்படும் பயிறு, வேளாண் விற்பனைக் கூடத்தில் ரூ.71.96க்கு கொள்முதல் செய்யப்படுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் கூடுதலாக 300 மெட்ரிக் டன் பயிறினை வேளாண் விற்பனைக்கூடத்துக்கு விற்பனைக்காக கொண்டுவந்து காத்திருக்கின்றனர்.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் அளவை விட அதிக அளவில் விளைச்சல் உள்ளதால் பச்சைப்பயறு கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பச்சைப்பயறினை செம்பனார்கோவில் வேளாண் விற்பனைக்கூட மேற்பார்வையாளர் பாபு தலைமையிலான விற்பனைக்கூட அலுவலர்கள் மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துக்கு இன்று கொண்டுவந்தனர். அதனை, தேசிய வேளாண் முகமை தர நிர்ணய ஆய்வாளர் வினோத்குமார் தர ஆய்வு செய்து கொள்முதல் செய்துகொண்டார்.

Tags:    

Similar News