விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

மயிலாடுதுறை அருகே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்மூட்டைகள் , கிடங்குக்கு அனுப்பப்படாமல் மழையில் நனைந்து முளைத்து சேதம்

Update: 2021-11-12 07:20 GMT

பசும்புல் போர்த்தியது போல பச்சை நிறத்தில் காணப்படும் நெல்மூட்டைகள்

மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, கிடங்குக்கு அனுப்பப்படாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ள 1000 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து சேதம்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, குறுவைப்பருவத்துக்கான நெல் கொள்முதல் தொடங்கி கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி முழுவதுமாக கொள்முதல் நிறுத்தப்பட்டது.

ஆனால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், கிடங்குக்கு அனுப்பப்படாமல் 5000 மூட்டைகளுக்குமேல் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைத்துள்ளனர். இந்த கொள்முதல் நிலையத்தில் மேற்கூரை வசதி உள்ளபோதிலும், கூடுதலாக உள்ள 3000 மூட்டை நெல் திறந்தவெளியில் அடுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பாதுகாக்க அரசு போதுமான அளவில் தார்ப்பாயை வழங்காததால், ஏற்கெனவே இருக்கின்ற தார்ப்பாய்களை வைத்து முடிந்தவரை நெல்மூட்டைகளை கொள்முதல் நிலைய ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இருப்பினும், தற்போது பெய்த மழையில்  1000 மூட்டைகளுக்கு மேல் மழையில் நனைதுந் முளைத்து வீணாகியுள்ளது. இதனால் அந்த நெல்மூட்டைகள் பசும்புல் போர்த்தியது போல பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது.

மழையில் நனைந்து அனைத்து நெல் மூட்டைகளும் வீணாவதற்கு முன்பாக அவற்றை லாரிகள் மூலம் கிடங்குக்கு கொண்டு சென்று, அரசுக்கு நஷ்டம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News