நெல் ஜெயராமன் நினைவு தினம்: விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் வழங்கல்
நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு, பருத்திக்குடியில், விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது.;
பருத்திக்குடியில், நெல் ஜெயராமன் நினைவு தினம், விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் வழங்கி அனுசரிக்கப்பட்டது.
ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் சார்பில், பாரம்பரிய நெல் போராளி நெல் ஜெயராமனின் 3-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பருத்திக்குடி கிராமத்தில் நடத்தப்பட்டது. நிகழ்வில் முதலில் நெல் ஜெயராமன் உருவ படத்திற்கு அனைவரும் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.
பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய முன்னோடி விவசாயி பந்தநல்லூர் அசோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பருவமழையால் பயிர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகள், குறுகிய கால பயிர்களை நேரடி விதைப்பு செய்வதன் மூலம் இழப்புகளை தவிர்க்கும் வகையில், தலா 2 கிலோ வீதம் பாரம்பரிய விதை நெல் ரகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதனை, காரைக்கால் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உமாமகேஸ்வரி, விவசாயிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், முன்னோடி விவசாயிகள் பலர் கலந்துகொண்டு, பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ள மருத்துவ குணங்கள் குறித்தும், இயற்கை விவசாயம் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினர். நெல் ஜெயராமன் நினைவு தினத்தை தமிழக அரசு பாரம்பரிய நெல் தினமாக அறிவித்து, அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். நிகழ்ச்சியை, ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையமும், ஐசிஐசிஐ பவுண்டேஷன் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்தின.