மயிலாடுதுறை: இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறையில்இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-04-21 03:09 GMT

மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக வந்த விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் கிராமத்தில் பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நில குத்தகை விவசாயிகளுக்கு விவசாய மின்இணைப்பு வழங்க தேவையான தடையில்லா சான்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படாததால் மின்இணைப்பு பெறமுடியவில்லை. இதனால் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நில குத்தகை விவசாயிகள் இலவச மின்சார மின்இணைப்பு வழங்க தடையில்லா சான்றிதழ் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வழங்ககோரி பந்தநல்லூர் பகுதியில் பல்வேறு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்பேரில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அப்போது மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், தாசில்தார் மகேந்திரன் மற்றும் விவசாயிகள் சார்பில் தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான குத்தாலம் கல்யாணம் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் தரப்பில், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நில குத்தகைதாரர்களுக்கு தடையில்லா சான்றினை இந்து சமய அறநிலையத்துறை உடனே வழங்க வேண்டும். தமிழக அரசின் அறிவிப்பிற்கு இணங்க மின்சார வாரியம் தடையில்லா சான்று கேட்டு நோட்டீஸ் வழங்கிய நபர்களுக்கு காலதாமதமின்றி இலவச மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருக்கும் குடிசை வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்புடைய கோவிலின் நிர்வாக அலுவலர்கள் தடையில்லா சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தாமல் கலைந்து சென்றனர்

Tags:    

Similar News