மயிலாடுதுறையில் தொடர் மழை: 70,000 டன் நெல் மூட்டை மழையில் நனைந்து சேதம்

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தும் நெல்லை பாதுகாக்காமல் வீணாக்கியிருப்பது வேதனையளிக்கிறது-EPS

Update: 2022-04-13 07:01 GMT

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.


நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 70,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தும், நெல்லை பாதுகாக்காமல் வீணாக்கியிருப்பது வேதனையளிக்கிறது.கோடைகால தொடர் மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

மயிலாடுதுறைமாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம், தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார்கோயில் பகுதிகளில் 170 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படாமல் நெல் மூட்டைகள் தேங்கிக்கிடக்கின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. நெல் மூட்டைகளை மூடி வைக்க தார்பாய்கள் இல்லாமல் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வாடகைக்கு தார்பாய் எடுத்து வந்து நெல் மூட்டைகளை பாதுகாத்து வருகின்றனர். தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால் நெல் மூட்டைகளின் எடை குறைந்து பெரும் இழப்பை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News