திருக்கடையூரில் கையக நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி போராட்டம்

திருக்கடையூரில் கையக நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி போராட்டம்

Update: 2021-12-26 11:31 GMT

தரங்கம்பாடியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரத்தில் இருந்து நாகை வரை என்.ஹெச் 45 ஏ நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறைமாவட்டம்கொள்ளிடம் முதல் பொறையார் வரை நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் பொதுமக்கள் விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில்  தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள நான்கு வழிச்சாலை ஒப்பந்த நிறுவனமான வில்ஸ்பன்  நிறுவன அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தரங்கை, செம்பை மற்றும் சீர்காழி ஒன்றிய குழுக்கள் சார்பில் கடந்த 21 -ம்தேதி முதல் தொடர் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  நான்கு வழி சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுவழங்க வேண்டும்,  குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், கோவில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கும், விவசாயம் செய்பவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு பகலாக அங்கேயே தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

6ம் நாள் போராட்டமாக இன்று வரை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாத மாவட்ட ஆட்சியரை கண்டித்து நூதன போராட்டம் நடத்தினர். விவசாயி ஒருவரை படுக்க வைத்து மாலை அணிவித்து, மலர்வளையம் வைத்து பெண்கள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர். தரங்கம்பாடி சென்ற மாவட்ட ஆட்சியர் போராட்டக்காரர்களை கண்டுகொள்ளாமல் மாற்று பாதையில் சென்றதாகவும், நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற 28ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 8ம் நாள் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News