தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேச நிகழ்விற்கு கோட்டாட்சியர் தடை

தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேச நிகழ்விற்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Update: 2022-05-02 10:49 GMT

தருமபுரம் ஆதீனகர்த்தர் பட்டண பிரவேசம் நடத்துவதற்கு ஆர்.டி.ஓ. தடை விதித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்வில் திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்த ராஜ் இந்நிகழ்ச்சியை தடை செய்திட கேட்டு அனுப்பிய அறிக்கையின் படியும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 இன்படி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து கோட்டாட்சியர் பாலாஜி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News