தரங்கம்பாடியில் இந்திய டேனிஷ் நல்லுறவை வளர்க்கும் புகைப்பட கண்காட்சி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இந்திய- டேனிஷ் நல்லுறவை வளர்க்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.

Update: 2021-12-10 06:15 GMT

தரங்கம்பாடியில் இந்தோ -டேனிஷ் புகைப்பட கண்காட்சியை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள இந்திய டேனிஷ் கலாச்சார மையத்தில் டென்மார்க் நாட்டின் டேனிஷ் கலாச்சாரம் பற்றிய புகைப்படக்கண்காட்சி தொடங்கப்பட்டது. தரங்கம்பாடிக்கு வந்த டேனிஷ் தரங்கம்பாடி சங்கத்தின் தலைவர் பால் பீட்டர்சன் தலைமையில் மூவர் குழுவினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்கள் நாட்டு கலாச்சாரத்தை எடுத்துக்கூறும் வகையில் டென்மார்க் நாட்டின் பிரபல புகைப்படக்கலைஞர் பென்ட்விக்லூன்ட் எடுத்த அரிய புகைப்படங்களை காட்சிப்படுத்தினர்.

அந்த புகைப்பட கண்காட்சியினை இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியில் செயின்ட் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் கருணா ஜோஸ்பின் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் மரிய லாசர் மற்றும் கல்லூரி பேராசிரியர் ஃபிளாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இந்தியா- டென்மார்க் கலாச்சார மையத்தின் தலைவர் பால் பீட்டர்சன் தலைமையிலான டென்மார்க் நாட்டினர் குழுவாக செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில்

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை கடல் அலைகளால் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகவும், கடற்கரையில் உள்ள ஆளுனர் மாளிகையை சீரமைத்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவரவும், கடற்கரையில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் தரங்கம்பாடி மேலும் பொலிவு பெறவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடி வந்து டேனிஷ் கோட்டை அமைக்கப்பட்டு 400 ஆண்டுகள் கடந்த நிலையில் அதனை கொண்டாடும் விதமாக விரைவில் பெரிய விழா நடத்தவுள்ளதாகவும் இதில் டென்மார்க் நாட்டின் பிரதிநிதியாக அரச குடும்பத்தை சேர்ந்தவர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News