செம்பனார்கோவிலில் ஊரடங்கு நாளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை

செம்பனார்கோவிலில் ஊரடங்கு நாளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Update: 2022-01-17 07:42 GMT

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் இருந்து மேலப்பாதி செல்லும் சாலையில் ஆற்றங்கரை ஓரத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை உள்ள பகுதியில் மதுபாட்டில்களை வாங்கி வைத்து கொண்டு வருடத்தில் 365 நாட்களும் அனைத்து நேரத்திலும் மது விற்பனை நடைபெறுவதாகவும், அதனை போலீசார் கண்டுகொள்வதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டும், கொரோனா முழு ஊரடங்கு காரணமாகவும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும் மூடப்பட்டன. இருப்பினும் இந்த டாஸ்மாக் மதுபானக்கடை உள்ள பகுதியில் மட்டும் சட்டவிரோதமாக மதுபானம் தங்குதடையின்றி விற்பனையாகி வருவதாகவும் இக்கடையில், 10க்கும் மேற்பட்டோர் விடுமுறை தினத்துக்கு முன்பாகவே, பெட்டி, பெட்டியாக மதுபானங்களை வாங்கி வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு புகார் தெரிவித்தால், பெயரளவுக்கு ஓரிருவரை மட்டும் கைது செய்யும் போலீசார், சட்டவிரோத மது விற்பனையை கண்டுகொள்வதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், டாஸ்மாக் கடை அருகில் ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக செம்பனார்கோவில் போலீசார் ஆடுதுறையை சேர்ந்த அருள் என்பவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வல்லம் பகுதியில் கீழத்தெருவில் மதுவிற்பனை செய்த கஜேந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News