மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரண்டாவது வாரமாக அரசு பஸ்சில் பயணம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரண்டாவது வாரமாக அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

Update: 2021-12-27 06:09 GMT
அரசு பஸ்சில் இரண்டாவது வாரமாக பயணம் செய்தார் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா. லலிதா.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் திங்கட்கிழமை ஒருநாள் அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளில், நடந்து அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இரண்டாவது வாரமாக இன்று தனது வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்று அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வருகை புரிந்தார். சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து, மாவட்ட ஆட்சியர் லலிதா 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் வந்தடைந்தார். அவர் மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணத்திட்டத்தில் பயணம் செய்தார். பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் முக கவசம் அணிந்து வெளியில் வர அறிவுறுத்தினார்.

கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்து சேர்ந்தார். மாவட்ட ஆட்சியரோடு ஆண் அதிகாரிகளும் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து வந்தடைந்தனர். வாரத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அப்போது மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்

Tags:    

Similar News