மயிலாடுதுறையில் 5 நாட்களாக போக்கு காட்டும் சிறுத்தை

சிறுத்தையை பிடிக்க கண்காணிப்பு குழுக்கள் தணிக்கை மேற்கொள்வதற்கும், கூண்டுகளை இடமாற்றம் செய்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

Update: 2024-04-08 04:31 GMT

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அச்சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு அருகில் உள்ள காவேரி ஆற்று பாலத்தின் அருகில் சிறுத்தையின் எச்சம் கிடைக்கப்பெற்றதாகவும், காவேரி, பழைய காவேரி மற்றும் மஞ்சலாறு உட்பட்ட பகுதிகளின் நீர்வழிப் புதர்களிலேயே அச்சிறுத்தை இருக்கலாம் என்று அறியமுடிவதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, நாகப்பட்டினம் வனஉயிரின காப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் 2ம் தேதியன்று மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் அறியப்பட்டதை தொடர்ந்து எடுக்கப்பட்ட வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக வெவ்வேறு புலிகள் காப்பகங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறுத்தை பிடிக்கும் கூண்டுகள் 7 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் சிறுத்தையானது நீர் வழிகளை அதிகமாக பயன்படுத்துவதாக அறியமுடிகிறது. முக்கியமாக மயிலாடுதுறை சுற்றுப்பகுதியில் உள்ள மஞ்சலாறு, மகிமலையாறு மற்றும் பழைய காவேரி ஆறு ஆகிய ஆறுகளில் சிறுத்தையின் நடமாட்டத்திற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

சிறுத்தையின் நடமாட்டத்தின் அடிப்படையில் மஞ்சலாறு, மறையூர் பகுதியில் 3 கூண்டுகளும் ஆரோக்கியநாத பகுதியில் ஒரு கூண்டும் மகிமலையாறு பகுதியில் 2 கூண்டுகளும் ரயில்வே சந்திப்பு அருகில் காவேரி ஆற்றுப்பாலத்தின் அருகில் ஒரு கூண்டும் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே 15 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 30 தானியங்கி கேமராக்கள் வரவழைக்கப்பட்டு அவற்றை சரியான இடங்களில் பொருத்தும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய மறையூர், சித்தர்காடு, ஊர்க்குடி போன்ற பல கிராமங்களில் குழுக்களாக சென்று பொதுமக்களிடம் தகவல் குறித்து விபரங்கள் சேகரித்தும் ஆங்காங்கே வீடுகளிலும் கடைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் வரப்பட்டது. மேலும், உள்ளுரில் உள்ள நாட்டு வகை நாய்கள் வைத்திருப்பவரின் உதவியுடன் அந்த நாட்டுவகை நாய்களை கொண்டு புதர் பகுதிகளிலும் ஓடை பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டத்தை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு அருகில் உள்ள காவேரி ஆற்று பாலத்தின் அருகில் சிறுத்தையின் எச்சம் கிடைக்கப்பெற்றது. அதனை, ஆய்வு செய்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சிறுத்தை உட்கொண்ட இரை தொடர்பாகவும் சிறுத்தையின் அடையாளம் குறித்தான சோதனைக்காகவும் சென்னை வண்டலூரில் உள்ள உயர் தொழில்நுட்ப வனஉயிரின் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் கிராம மக்கள் காவேரி ரயில்வே பாலத்தை ஒட்டிய பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை நேரடியாகப் பார்த்ததாக அளித்த தகவல் அடிப்படையில் அதனை உறுதி செய்வதற்காக சிறுத்தையின் கால்தடங்கள், எச்சங்கள் ஆகியவற்றை அப்பகுதியில் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவல் மற்றும் 3 நாட்களாக சேகரித்த தகவல்கள் அடிப்படையில் காவேரி, பழைய காவேரி மற்றும் மஞ்சலாறு உட்பட்ட பகுதிகளின் நீர்வழிப் புதர்களிலேயே அச்சிறுத்தை இருக்கலாம் என்று அறியமுடிகிறது. அதற்கேற்றவாறு, கண்காணிப்பு குழுக்கள் தணிக்கை மேற்கொள்வதற்கும், கூண்டுகளை இடமாற்றம் செய்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News