மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாய தொழிலாளர்கள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-01-05 11:51 GMT

காத்திருப்பு போராட்டத்தின் போது  விவசாயிகள்-  போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொடர் மழையினால் அழிந்துபோன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30 ஆயிரம் இழப்பீடு கேட்டு, வேலை இழந்த விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ 10,000 வழங்க கோரியும், 2020-2021 ல் பிரீமியம் செலுத்தி விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள அனைத்து தொகுப்பு வீடுகளையும் புதிதாகக் கட்டிக் கொடுக்க வேண்டும்,கோமாரி நோயால் இறந்துபோன கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், போர்கால அடிப்படையில் தடுப்பூசிகளையும் போடவேண்டும், அனைத்து நீர் நிலைகளையும் முழுமையாக தூர்வார வேண்டும் என்பது   உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று 12 மணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுதற்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த விவசாய சங்கத்தினர் தடுப்புகளை தூக்கி எறிந்ததால் போலீசாருக்கும் விவசாய சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர்ந்து சாலையில் அமர்ந்தவாறு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையில் டெண்ட் அமைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News