மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்

மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2022-01-20 09:55 GMT

மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரியை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சீர்காழி தாலுகா எருக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையில் அரைக்கப்பட்டு, அந்த அரிசி மாவட்டம் முழுவதும் உள்ள 424 ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு 2 லட்சத்து 76 ஆயிரத்து 401 குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தரமான ரேஷன் அரிசி வழங்கக்கோரி பொது மக்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் கடந்த 8 மாதங்களாக தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமாரிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றிரவு சித்தமல்லி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு அரிசி ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இன்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News