மயிலாடுதுறை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா

மயிலாடுதுறை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் 108ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா மிக சிறப்பாக நடந்தது.

Update: 2022-04-17 02:54 GMT

குத்தாலம் அருகே ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் 108ஆம் ஆண்டு சித்ரா பெளர்ணமி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 3ஆம் தேதி சித்திரை திருவிழா நிகழ்வுகள் கொடியேற்றத்துடன் துவங்கியது.

பின்னர் கணபதி ஹோமம் , அம்மன் வீதி உலா ஆகியவை தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் மற்றும் காவடி வீதிஉலா சிறப்பாக நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க விரதமிருந்த பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து அலகு காவடி , சக்தி கரகம் மற்றும் பால்குடம் எடுத்து முக்கிய தெருக்களில் வீதி உலாவாக சென்றனர்.

பின்னர் பக்தர்கள் எடுத்துவந்த பாலினைக் கொண்டு முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். பின்னர் கோவிலில் இருந்து கிராமத்தை சுற்றி உள்ள முக்கிய வீதிகளில் மாரியம்மன் வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Tags:    

Similar News