சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், கிராமமக்கள் கோரிக்கை

குத்தாலம் அருகே திருக்குளம்பியம் கிராமத்தில் சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்றகோரி ஒருபிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சுடுகாட்டிற்கு மயான கொட்டகை சாலை வசதி, தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தரக்கோரி கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர், ஒரு வாரத்திற்குள் தீர்வு ஏற்படுத்தி தாரவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

Update: 2021-04-21 11:00 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கருப்பூர் ஊராட்சி திருக்குளம்பியம் கிராமத்தில் அண்மையில் இறந்த நாகராஜ் என்பவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து கிராமத்தில் உள்ள ஒருபிரிவினர் போராட்டம் நடத்தினர்.

இதனால் போலீஸ் குவிக்கப்பட்டு, வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உடலை அடக்கம் செய்தனர். பேச்சுவார்த்தையில் மனு அளித்தால் சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள நடவடிக்கை எடுப்பதாக வருவாய்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி அளித்திருந்தனர்.

இந்நிலையில் காலங்காலமாக அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் சுடுகாட்டை அதே இடத்தில் நீட்டித்து அங்கு மயான கொட்டகை அமைத்து, சாலைவசதி. தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுடுகாட்டின் அருகே வீட்டை கட்டிகொண்டு சுடுகாட்டின் இடத்தை மாற்ற கோருவது நியாயமற்ற செயல் எனவும், ஒரு வாரத்திற்குள் சுடுகாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால் கிராமமக்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News