சீர்காழி: தாசில்தாரிடம் புகார் அளித்த மீனவக் குடும்பத்தினர் மீது தாக்குதல்

ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவக்குடும்பத்தினரை தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

Update: 2021-09-01 02:17 GMT

சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மீனவர்கள்

வட்டாட்சியரிடம் புகார் அளித்த ஆத்திரத்தில் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவக்குடும்பத்தினரை தாக்கியதில் காயமடைந்த 5 பேர் சீர்காழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர் கர்ணன், ஜெயக்குமார், மாதவன் உள்ளிட்ட 6 குடும்பத்தினரை, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும், இந்தக்குடும்பங்களுக்கு மளிகை கடைகளில் எந்த ஒரு பொருளும் கொடுக்கக்கூடாது, கோயிலுக்கு வரக்கூடாது, கிராம மக்கள் யாரும் பேசக்கூடாது என மீனவ கிராமத் தலைவர் அறிவித்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவக்குடும்பத்தினர் சீர்காழி வட்டாட்சியர் சண்முகத்திடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் சண்முகம், டிஎஸ்பி லாமெக் ஆகியோர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில், கிராமத் தலைவர், கிராம மக்களை அழைத்து பேசி ஆலோசனை செய்த  பின்னர், முடிவை தெரிவிப்பதாக கூறிச்சென்றார்.

இந்நிலையில், வட்டாட்சியரிடம் புகார் அளித்த ஆத்திரத்தில் இருந்த கீழமூவர்கரை சேர்ந்த எதிர்தரப்பினர்,  கோஷ்டியாகச் சேர்ந்து , ஊரை விட்டு ஒதுக்கி வைத்த குடும்பத்தினரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த 5 மீனவர்கள் உள்பட பலரும், சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . மேலும் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் ஊரை காலி செய்து, குழந்தைகளுடன் அரசு மருத்துவமனையில்  தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News