'நகர்ப்புற தேர்தலில் தி.மு.க.விற்கு 61 சதவீதம் வாக்கு'-அமைச்சர் மெய்யநாதன்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.விற்கு 61 சதவீதம் வாக்கு கிடைத்து இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2022-02-23 11:05 GMT

மயிலாடுதுறையில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. இதனையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தரங்கம்பாடி பேரூராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 16 தி.மு.க. வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து மயிலாடுதுறை கண்ணார தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 24 வேட்பாளர்களை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான நிவேதா எம்.முருகன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களை வாழ்த்தி பேசிய அமைச்சர் மெய்யநாதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் .நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் 61 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளதாக கூறினார். மேலும் பிரதமர் மோடி வாக்களிக்காத மாநிலங்களை புறக்கணிப்பதாகவும் , பிரதமராக பொறுப்பு வகித்து இருந்தாலும் அவரது வாக்கு வங்கி உயராமல் இருக்கிறது என்றும் தெரிவித்தார். ஏழை எளியோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தன்னை ஒப்படைத்த முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Tags:    

Similar News