உசிலம்பட்டியில், மின் வாரிய ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்...!

உசிலம்பட்டி மின் வாரிய ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-06-06 09:22 GMT

உசிலம்பட்டியில் மின்வாரிய ஊழியர்கள் திடீர் போராட்டம்.

உசிலம்பட்டி:

மதுரை அருகே,உசிலம்பட்டியில் மின் வாரிய ஊழியர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து , உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 14 உப மின் நிலையங்களில் பணியாற்றும் - மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே டி.இராமநாதபுரம் உப மின் நிலையத்தில் பணியாற்றும் பாண்டி என்பவர் கடந்த 16.05.2024 அன்று விட்டல்பட்டி என்ற கிராமத்தில் ஏற்பட்ட மின் தடையை சரி செய்ய சென்ற போது ,மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டது.  இதில் சிறு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள சூழலில், மின்சார வாரிய உயர் அதிகாரிகள் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து கடந்த 17.05.2024 அன்று சாப்டூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் அவரது மேல் அதிகாரியான மின் பாதை ஆய்வாளர் ஜெயக்கொடி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது, இதனைக் கண்டித்தும், துறை ரீதியான நடவடிக்கைகள் எடுத்த பின் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு மின் வாரிய ஊழியர்களுக்கு மேலும், மன உளைச்சலை ஏற்படுத்தும் என, கூறி காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி, இன்று உசிலம்பட்டி உப மின் நிலையத்தில் மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துடன், செயற் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு, ஆதரவாக எழுமலை, டி.இராமநாதபுரம், நாகமலைப்புதுக்கோட்டை, செக்காணூரணி, எம்.கல்லுப்பட்டி, சின்னக்கட்டளை, வாலாந்தூர், உத்தப்பநாயக்கணூர் என சுமார் 14 உப மின் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News