உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-15 07:29 GMT

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தமிழ்நாடு முழுவதும், காலியாகஉள்ள 50ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி , உசிலம்பட்டியில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சத்துணவு ஊழியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது எனவும், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு சத்துணவு ஊழியர்களும் ஒன்று முதல் மூன்று சத்துணவு மையங்களில் கூடுதல் பணி செய்யும் நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையை, மாற்றவும், சத்துணவு ஊழியர்களுக்கு உள்ள பணிச்சுமையை குறைக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி, தொடர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் இந்த காலிப்பணியிடங்களை போர்க் கால அடிப்படையில் நிரப்ப கோரி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நடத்தினர்.


இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நூர்ஜஹான் தலைமையிலான சத்துணவு ஊழியர்கள் 50 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப கோரியும், 6750 அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தில் ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்,

ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில், மாவட்ட தலைநகரங்களில் அடுத்தகட்ட போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Similar News