உசிலம்பட்டி அரசு மருத்துவமனை அருகே குப்பை: சுகாதார சீர்கேடு..!

அரசு மருத்துவமனையா அல்லது குப்பைக் கிடங்கா என்று கேட்கும் அளவுக்கு குப்பை தேங்கிக்கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

Update: 2024-03-16 12:02 GMT

உசிலம்பட்டி அரசு மருத்துவமனை அருகே குவிந்துள்ள குப்பை.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேங்கும் குப்பைகளை அகற்றுவதில் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் - நகராட்சி நிர்வாகத்திற்கும் உள்ள குளறுபடியால், குப்பைகள் மலை போல தேங்கியுள்ள அவல நிலை உருவாகியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், தினசரி 200 க்கும் அதிகமானோர் உள் நோயாளியாகவும், 500 க்கும் அதிகமானோர் புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அரசு மருத்துவமனையில் தேங்கும் குப்பைகளை மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் இணை இயக்குனர் அலுவலகத்தின் பின் புறத்தில் சேகரிக்கப்பட்டு, தினசரி நகராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டு வந்த சூழலில் கடந்த 1 மாத காலமாக குப்பைகளை அகற்றுவதில் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் கருத்து முரண்பாடுகள்  ஏற்பட்டு குப்பைகள் அகற்றப்படாமல், மலை போல தேங்கி காணப்படும் அவல நிலை உருவாகியுள்ளது.

குப்பைகள் அகற்றப்படாத சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் நோய்க்கான சிகிச்சை பெற வரும் இடத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. குப்பைகள் மலை போல தேங்கியுள்ளதால்  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குப்பைகளை அகற்றுவதில் இரு நிர்வாகங்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை சரி செய்து, மருத்துவமனையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

மருத்துவ கழிவுகளை மருத்துமனை முறையாக கையாள்வது அவசியம் ஆகும். மருத்துவ கழிவுகளை பிரிப்பதில் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை பணியமர்த்துவது அவசியம் ஆகும். ஏனெனில் மருத்துவ கழிவுகளை அகற்றும் தூய்மைப்பணியாளர்களும் பாதிக்கப்படலாம். 

அதனால் இரு தரப்பு நிர்வாகமும் இணைந்து ஒருங்கிணைப்போடு பணியாற்றினால் மட்டுமே மருத்துவமனை வளாகம் தூய்மை ஆகும். 

Tags:    

Similar News