சேடப்பட்டியில் பெண் சிசு கொலை: பெற்றோர் கைது

சேடபட்டியில் பெண் சிசுக் கொலையில் ஈடுபட்ட பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-03 13:42 GMT

மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் சேடப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கட்டளையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மூன்றாவது மகள் பிறந்த ஆறு நாட்களுக்குள்ளேயே இறந்து போனது சம்பந்தமாக, சேடபட்டி காவல் நிலையத்தில் வழக்கு ப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது.

இந்நிலையில், மேற்படி சிசுவின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பெரிய கட்டளை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்படி சிசு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து விசாரணை செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன், உத்தரவிட்டார்.

அதன்பேரில், மதுரை அரசு இராசாசி மருத்துவமனை தடய அறிவியல் மருத்துவத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மேற்படி சிசுவின் பிரேதத்தை தோண்டி எடுத்து பிணக் கூராய்வு செய்ததில் சிசுவின் தலையின் மீது ஏற்பட்ட காயத்தினால் சிசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, மேற்படி சிசுவின் பெற்றோர்களான முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யா ஆகியோரை சேடபட்டி காவல்துறையினர் விசாரணை செய்ததில், சிசுவின் தாயாரான கௌசல்யா என்பவர் தனக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அக்குழந்தையை தங்களால் சரியாக வளர்க்க முடியாத காரணத்தினால் மேற்படி பெண் குழந்தையின் தலையை சுவற்றில் மோத வைத்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து, மேற்படி, சிசுவின் பெற்றோர்களான முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News