நீதிமன்றத்தில் ரத்த வாந்தி, மயக்கம்; அபாராதம் செலுத்தி வெளியே வந்தவர் சாவு
நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி விட்டு வெளியே வந்த நபர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
பைல் படம்.
திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் நாட்டாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்(37). இவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு குணசேகரன் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு செய்து வழக்கு நீதிமன்றத்தில் இருந்தது.
இந்நிலையில் , வழக்கை முடித்து அபராதம் செலுத்துவதற்காக வந்தார். அபராதத் தொகையை செலுத்திவிட்டு நீதிமன்றத்தின் வெளியே வந்து அமர்ந்திருந்தார். திடீரென குணசேகரன் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் குணசேகரனை மீட்டு, சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குணசேகரன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனை உடற்கூறு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.