மதுரை அரசு பஸ்சுக்குள் மழை..! குடை பிடிக்கும் பயணிகள்..!

சோழவந்தான் அருகே, பேருந்தின் உள்ளே மழை பெய்ததால் குடை பிடித்தபடி பயணம் செய்த பயணிகள்.பேருந்து ஓட்டை என்பதை இதைவிட நாகரிகமாக கூறிவிடமுடியாது

Update: 2024-08-16 10:54 GMT

பேருந்துக்குள் குடைபிடித்தபடி பயணி.

.சோழவந்தான்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் சென்ற அரசு பேருந்தின் உள்ளே மழை பெய்ததால், குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்த சம்பவம் போக்குவரத்து துறையின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் மோசமான நிலையில் இயங்கி வரும் நிலையில் மதுரை அண்ணா பேருந்து நிலையத்

திலிருந்து சோழவந்தான் அருகே உள்ள நாச்சிகுளம் செல்லும் தடம் எண் TN. 57 N 1633 .28 ஏ என்ற பேருந்து நேற்று இரவு 8.15 மணியளவில் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்தது.

அந்த நேரத்தில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், பேருந்தின் பல்வேறு பகுதிகள் முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் ஓட்டை உடைசலாக இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மழை பெய்தவுடன் பேருந்தின் கூரைப் பகுதியில் இருந்து மழை நீர் பேருந்து உள்ளே ஒழுகத்  தொடங்கியது. இதன் காரணமாக, உள்ளே இருந்த பத்துக்கும்  மேற்பட்ட பயணிகள் மழையில் நனையாதவாறு அங்கும் இங்கும் இடம் மாறி அமர்ந்தும் எல்லா பகுதிகளிலும் மழை நீர் விழுந்ததால் செய்வதறியாத திகைத்த சண்முகம் என்ற பயணி தன்னிடம் இருந்த குடையை எடுத்து பேருந்தின் உள்ளே மழையில் நனையாதவாறு பிடித்தபடி நாச்சிகுளம் வரை சென்றார் .

இது குறித்து, அவர் கூறுகையில், போக்குவரத்து துறையில் பேருந்துகள் சரிவர பராமரிக்கப்படாத நிலையில், ஆங்காங்கே பழுதடைந்த நிலையில் நிற்பதும் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகள் வராததும் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குவதுமாக பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மழை பெய்தவுடன் பேருந்து உள்ளே நிற்க முடியாத நிலையில் குடை பிடித்தவாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது .

இதுகுறித்து, அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும், முறையாக எந்த ஒரு பதிலும் அளிப்பதில்லை. ஆகையால், போக்குவரத்துத்  துறை இனியாவது விழித்துக் கொண்டு பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்குவதற்கான, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தெரிவித்தார்.

Tags:    

Similar News