அரசு பள்ளி அருகே, மது பிரியர்கள் அட்டகாசம்: நடவடிக்கை உண்டா?

சோழவந்தான் அருகே, ஐயப்பன் நாயக்கன்பட்டி அரசு பள்ளி அருகில், குடிமகன்களின் அவல செய்கையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-23 12:03 GMT

அரசு மேல்நிலைப்பள்ளி பகுதி.

சோழவந்தான் அருகே, ஐயப்பன் நாயக்கன்பட்டி அரசு பள்ளி அருகில், குடிமகன்களின் அவல  செய்கையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பள்ளிசென்று வருகின்றனர். 

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, ஐயப்பன் நாயக்கன்பட்டியில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி அருகே, பயனற்ற நிலையில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஒன்று உள்ளது .

இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாத நிலையில், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் சூழ்நிலை உள்ளது . இந்த தொட்டியின் உள்பகுதியில் சமூக விரோதிகள் மற்றும் மது பிரியர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில்  கும்பலாக அமர்ந்து மது அருந்துவதும் கஞ்சா மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மது குடித்துவிட்டு வீசும் பிளாஸ்டிக் க்ளாஸ்கள் குப்பையாக சேர்ந்து கிடக்கிறது.

அருகிலேயே அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளதால், அங்கு படிக்கும் மாணவிகளை போதை ஆசாமிகள் தொந்தரவு செய்வதும் ஆசிரியர்களை தங்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பதுமாக இடையூறு செய்து வருகின்றனர். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது குறித்து, இங்குள்ள பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் மாவட்ட நிர்வாகம்  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். மேலும்,போதை ஆசாமிகள் மாணவர்களுக்கும் போதை பழக்கத்தை கற்றுத் தரும் அபாய நிலை உள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என, பொதுமக்கள் பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

காவல்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பகுதியை  நேரில் ஆய்வு செய்து , பராமரிப்பு இல்லாத மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்தி மாணவரின் நலனை பாதுகாக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலையிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News