பாலாறு, தேனாறு ஓடிய தமிழகத்தில் இன்று டாஸ்மாக் பார் ஆறு ஓடுவதாக குற்றச்சாட்டு

பாலாறு, தேனாறு ஓடிய தமிழகத்தில் இன்று டாஸ்மாக் ஆறு ஓடுவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2022-11-29 08:34 GMT

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உதயகுமார்.

தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் தான் பாலாறு போல் ஓடுகிறது என்று  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் போதைப் பொருட்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த அபாயகரமான சூழ்நிலையை, அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்  தொடர்ந்து இந்த அரசை வலியுறுத்தி வருகிறார். ஆளுநரிடம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடியார் போதை பொருள் குறித்து, இந்த அரசு நடவடிக்கை எடுக்க தவறியதை சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ்நாட்டிலே ,சட்ட விரோதமாக போதை பொருள் தடுப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிற சூழ்நிலையிலே, அதைவிட இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுவதை நாம் பார்க்கிறபோது, இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை தான் இந்த நாட்டு மக்கள் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த தாய் திருநாடு, பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடும்மிக்க இந்த தாய் தமிழ் இனம், இன்றைக்கு டாஸ்மாக் கடைகளிலே 24 மணி நேரமும் அங்கே காத்துக் கிடக்கிற அவலநிலை,இதற்கு அரசே வலியுறுத்தி கொடுக்கிற ஒரு நிலையை பார்க்கிறபோது நெஞ்சம் பரிதவிக்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று கூட, ராமநாதபுரம் மாவட்டத்திலே தி.மு.க.வை சேர்ந்த இருவர் பல நூறு கோடி ரூபாயிலே போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுஇருப்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது. .இன்றைக்கு , மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள நீதியரசர்களே கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

டாஸ்மாக் கடையினுடைய நேரம் பொதுவாக 12 முதல் 10 மணி வரை என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட,இன்றைக்கு 24 மணி நேரமும் செயல்படுகிறது. அது மட்டுமல்ல, டாஸ்மாக் கடையில் விலை பட்டியலே கிடையாது. அந்த மதுபானங்களுக்கு விலை கூடுதலாக விற்கப்படுகிறது. யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சட்டப்படி மது விற்பனை செய்யக்கூடாது என்ற அறிவுறுத்தல் செய்யப்படுகிறதா, டாஸ்மாக் கடைகள் 2 மணி முதல்8 மணி வரை செயல்பட பல்வேறு கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு, நீதியரசர்கள் பட்டவர்த்தமாக, வெட்ட வெளிச்சமாக தி.மு.க. அரசை தோலுரித்துக் காட்டியுள்ளார்கள்.

மது விற்பனையில், பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னணியில் உள்ளது. கடைகள் செயல்படும் நேரத்தை மேலும் ,குறைத்தால் என்ன என்று இந்த அரசுக்கு பகிரங்கமாக நீதியரசர்கள் கேள்வி கேட்டிருக்கிறது என்பது இந்த அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

எடப்பாடியார்,  சுட்டிக் காட்டியதை,இன்றைக்கு நீதியரசர்கள் அந்த கேள்வியை கேள்வி எழுப்பி மாணவர்களுக்கு மது விற்பனை முற்றிலும் தடை செய்யப்படவில்லையா என ஆச்சரியமாக கேள்வி  எழுப்பி உள்ளார்கள்.

பாலாறு, தேனாறு ஓடிய  தமிழ்நாட்டில் இன்று டாஸ்மாக் பார்கள் ஓடுகிற ஒரு அவல நிலை உள்ளது. பிள்ளைகளுக்கு மடிக்கணிணி கொடுத்து, கணினி புரட்சி ஏற்படுத்தி, வல்லரசு நாடுகளுக்கு இணையாக  தமிழகத்தில் மாணவர்களை அறிவு ஆற்றல் மிகுந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கிய திட்டம் தந்த ஜெயலலிதா 500 டாஸ்மாக் கடைகளை மூடினார்கள். அதனை தொடர்ந்து எடப்பாடியார் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 

இன்றைக்கு கணக்கில் அடங்காத பெட்டிக்கடை போல், மதுபான கடைகள் நாடெங்கும் திறக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று தெரியவில்லை.மாவட்ட நிர்வாகத்தினுடைய எண்ணிக்கைக்கும், செயல்படுகிற மதுபான கடைகளுடைய எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. 

அரசு அதிகாரம் இல்லாமல், புற வழியில் அதிகாரத்தை இதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்ற கேள்வி இன்றைக்கு மக்கள் மத்தியில் விவாதத்தில் இருக்கிறது. நாடெங்கும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது. கல்விச்சாலைகள் செய்வோம் என்று சொன்ன இந்த தாய் தமிழ் நாட்டிலே, இன்றைக்கு பார்சாலைகளாக தமிழ்நாட்டுச் சாலைகள் மாறி இருப்பது வேதனையின் உச்சமாகும். இளைய சமுதாயத்தை காப்பதற்கு நீதியரசர்கள் முன் வைத்திருக்கிற கேள்விகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு முன்வருமா?

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News