சேதமடைந்த வயரை மாற்ற மின்வாரிய ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார்
மதுரை தல்லாகுளம் சின்ன சொக்கிகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் பழமையான மரங்கள் முறிந்து விழுந்தால் மின்கம்பிகள் சேதமடைந்தன.;
மதுரையில் மழை காரணமாக சேதம் அடைந்த மின் கம்பிகளை மாற்றுவதற்கு வீடு தோறும் மின்வாரிய ஊழியர்கள் பணம் வசூலித்த குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் பகுதிகளில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் கூடிய கனமழையானது பெய்தது.இதன் காரணமாக மதுரை தல்லாகுளம் சின்ன சொக்கிகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் பழமையான மரங்கள் விழுந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய வணிக நிறுவனங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் செல்லாமல் தடைபட்டது.
இந்த நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் அருந்து விழுந்த மின் கம்பியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள், ஒவ்வொரு வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று மின் கம்பிகளை மாற்றியதற்காக தலா ஆயிரம் ரூபாய் வரையும் கேட்டுள்ளனர். தெருவில் மின் கம்பிகள் மழை காரணமாக அறுந்து விழுந்த நிலையில் அதனை மாற்றுவதற்கு தாங்கள் எதற்கு பணம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் சிலர் கேட்டுள்ளனர். எனினும், தங்களுக்கு பணம் கொடுத்தால் தான் கனெக்சன் கிடைக்கும் என பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பதிலளித்துள்ளனர்.
மேலும் மின்வாரியத்தால் நியமிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மின்சார வயர்களை மாற்றும் பணிகளில் ஈடுபடாமல் தற்காலிக பணியாளர்களை வைத்து வயர்களை மாற்றிவிட்டு, பணத்தை வசூல் செய்வதில் மட்டும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டதாக பொதுமக்கல் புகார் தெரிவித்தனர். இது குறித்தான விடியோ காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பதில் அளித்துள்ள மின்வாரிய அதிகாரி விடியோ குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு பணம் பெற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.