திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர திருநாளையொட்டி திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே குவிந்தனர்.

Update: 2022-03-18 09:19 GMT

சர்வ அலங்காரத்தில் முருகப்பெருமான்.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சாமி திருக்கோவில்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திரத்தின் விசேஷ விழா நடைபெற்று வருவது வழக்கம்.

அதில், பங்குனி மாதத்தில்  உத்திர நட்சத்திர நாளில் பங்குனி உத்திரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. முருகப்பெருமான்குடி கொண்டு அருளாட்சி புரியும் திருத்தலங்களில் பங்குனி உத்திரவிழா கோலாகலமாக நடைபெற்று வருவது வழக்கமாக உள்ளது.

பங்குனி உத்திர நாளான இன்று விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால், நீண்டகாலமாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது தெய்வீக நம்பிக்கை ஆகும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழா  15 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

ஆகவே, இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா கடந்த 8 - ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று பங்குனி உத்திர விழா நடைபெற்றது. விழாவை யொட்டி, சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சர்வ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதற்காக , மதுரை, திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான், கல்லுப்பட்டி,பேரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சில பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பெரும்பாலான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் சாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News