முத்துமாரியம்மன் ஆலய வைகாசி திருவிழா..!

மதுரை ஓம் சக்தி நகர் முத்துமாரி அம்மன் கோவிலில் 31 ம் ஆண்டு வைகாசி திருவிழா கோலாகலம்.

Update: 2024-06-06 09:15 GMT

மதுரை ஓம்சக்தி நகர் முத்து மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா 

மதுரை:

தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களிலுமே ஒவ்வொரு மாதத்திலும் ஒரு திருவிழா, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மதுரை அருள்மிகு ஓம் சக்தி நகர் முத்துமாரியம்மன் கோயிலில், நடக்கும் வைகாசி திருவிழா மிகவும் பிரசித்தமானது.

முத்துமாரி அம்மன் கோவிலில் நடந்து வரும் வைகாசி திருவிழாவையொட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே, ஓம் சக்தி நகரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் பிரசித்தி பெற்ற திருக்கோவிலின் 31-ம் ஆண்டு வைகாசி திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 25-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வெயில் உகந்த அம்மன் கோவில் இருந்து சக்தி கரகம் மற்றும் தீச்சட்டி எடுத்தல் ஜீன்.4 மாலை 5 மணிக்கு தொடங்கியது, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

திருவிழாவில் ஊர்பொங்கல், சக்தி கிடாய் வெட்டுதல், அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலமும், மாவிளக்கு பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் குருக்கள் முத்துராஜா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, விழாக்குழு சார்பில், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். பின்னர் மஞ்சள் நீராட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவை கோவில் நிர்வாகிகள் ராமலெட்சுமி, பிலிப்போஸ், பாலசுப்ரமணியன், பூசாரி கணேசன், ஆண்டிச்சாமி, செந்தில், பரமசிவம், பாண்டியராஜன், அழகர்சாமி மற்றும் பாலு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இதில், ஓம் சக்தி நகர், சூளை விநாயகர் நகர் ராமானுஜ நகர், கோட்டைச் சாமி நகர், சக்தி நகர் மீனாட்சி நகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News