தமிழக மக்களின் விருப்பத்துக்கு எதிராக மோடி அரசு செயல்படாது: தொல்.திருமாவளவன்

தமிழக தரப்பு கருத்துகளை கேட்டுக்கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேக்கேதாட்டு அணை கட்டப்படாது என்று உறுதி அளித்திருக்கிறார் என திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார்.;

Update: 2021-07-18 10:33 GMT

தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக மோடி அரசு செயல்படாது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன்( எம்.பி.) நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை கட்டும் பிரச்னையில், இந்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாட்டின் சார்பில் நமது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழு சந்தித்தது. தமிழக தரப்பு கருத்துகளை கேட்டுக்கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாது அணை கட்டப்படாது என்று உறுதி அளித்திருக்கிறார். தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக ,மோடி அரசு செயல்படாது என்று நம்புவோம் என்றார்.

நீட் தேர்வு ரத்து செய்யும் விவகாரத்தில் தமிழக மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார் தமிழக முதல்வர். அந்தக் குழு விவரமான அறிக்கையை அளித்துள்ளது. எனவே, அதன் மீதான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும். இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தமிழக அரசு பயிற்சி அளித்து வருகிறது. ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை நமக்கு சாதகமாக அமையும் என நம்புகிறோம்.

மின்சாரம் தாக்கி காயம் அடைந்துள்ள ஒப்பந்த பணியாளரை போல, மேலும், பல துப்புரவு பணியாளர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். இதுபோன்று, பாதிக்கப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் என்றார் திருமாவளவன்.

Tags:    

Similar News