தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது ஏற்புடையதல்ல: எம்.பி. கார்த்திசிதம்பரம்

அரசு நிறுவனங்கள் அனைத்தும் சென்னையிலிருந்து மாற்றி திருச்சி அருகே கொண்டு வர வேண்டும்

Update: 2021-11-28 07:30 GMT

கார்த்திசிதம்பரம்(பைல் படம்)

சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை என கூறுவது ஏற்புடையதல்ல  என்றார்  சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த சிவகங்கை  மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கான பாலியல் தொல்லை என்பது காலம் காலமாக நடந்து வந்துள்ளது.இதற்கு முன் யாரும் தைரியமாக புகார் அளிக்கவில்லை. தற்போது, புகார் அளித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், தைரியமாக மாணவிகள் புகார் அளிக்கின்றனர். வெளிப்படையான தீர்வுகாண வேண்டுமென்றால் பெண் குழந்தைகளுக்கு உடனடியாக புகார் அளிக்க தைரியத்தை கொடுக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்திற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது. பருவநிலை மாற்றத்திற்கு ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மீது பழி சுமத்துவது தவறு.  நீர் தேங்கும் இடங்களில் வீடு கட்டியதால் தண்ணீர் வெளியேற முடியாமல் பல்வேறு இடங்களில்  தேங்கி நிற்கிறது. இதனால் வந்துள்ள பிரச்னையை  தடுக்க, அரசுக்கு  அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

அரசு நிறுவனங்கள் அனைத்தும் சென்னையிலிருந்து மாற்றி திருச்சி அருகே கொண்டு வர வேண்டும். அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டது. இருந்தபோதிலும் அனைவரும் சென்னையையே நாடுவது தவறு. அனைத்து அதிகார மையங்களும்  சென்னையில் உள்ளது.  தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளுக்கு முக்கியமான அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சகத்தை கூட மாற்றலாம்.  அதிகாரத்தை மற்ற பகுதிகளுக்கும் பரவலாக்கும் வகையில்  பிரித்துக் கொடுத்தால்தான், சென்னையில் நெரிசல் குறையும். மற்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் வருவது அதிகரிக்கும்.

கலைஞர் உணவகத்தில் சாப்பாடு ருசியாக இருந்தால் சரி மலிவான விலையில் சாப்பாடு ருசியாக இருந்தால், அதை  ஏற்றுக்கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை என்றார் கார்த்திசிதம்பரம்.

Tags:    

Similar News