கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

திருப்பரங்குன்றம் அருகே கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-30 10:20 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் நிலையூர் முதல் பிட் கண்மாயில் பகுதியில் அமைந்துள்ள ஹார்வி பட்டியிலிருந்து-தனக்கன்குளம் பகுதி வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர் திருமங்கலம்-திண்டுக்கல் நான்கு வழி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் முதல் கண்மாய்க்கு வைகை பாசன நீர் ஆண்டுதோறும் திறந்துவிடப்படும். கண்மாயின் மூலம் கூத்தியார்குண்டு கருவேலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றது.

இந்த நிலையில், கண்மாய்க்கு அருகில் தனக்கன்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளதால், கண்மாயில் நீர் நிரம்பும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்வது வழக்கம். இந் நிலையில், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த கூத்தியார்குண்டு- கருவேலம்பட்டி விவசாயிகள் நீர்பிடிப்பு பகுதிகளில் வீடுகள் கட்ட அனுமதித்ததால், ஆண்டுதோறும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் செல்வதை காரணம் காட்டி அதிகாரிகள் கண்மாயில் உள்ள தண்ணீரை திறந்து விடுவதாகவும், இதனால், விவசாயம் பாதிக்கப் படுவதாகவும் கூறினர்.

தொடர்ந்து, அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்., இன்று கூத்தியார்குண்டு- கருவேலம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் திருமங்கலம்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கூத்தியார்குண்டு விலக்கில்  300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர்ந்து., கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி காவல் நிலைய போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் பேச்சு வார்த்தை நடத்தினார். போராட்டத்தை கைவிட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, உரிய அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக்கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் திருமங்கலம் டி.எஸ்.பி. சிவகுமார் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், விவசாயிகள் தங்களது ஒரு மணி நேர போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த போராட்டத்தால், திருமங்கலம்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News