மதுரை நகரில் நடந்த குற்றச் சம்பவங்கள்: போலீஸார் விசாரணை

தபால்தந்தி நகரில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர்மீது தாக்குதல் நடத்தி மர்ம நபர்கள் செல்போன்கள் பறிப்பு

Update: 2022-11-27 13:30 GMT

பைல் படம்

தபால்தந்தி நகரில் மெடிக்கல் ஷாப் உரிமையாளரை தாக்கி பேக்குடன் செல்போன்கள் பறிப்பு:

மதுரை தபால் தந்தி நகரில் மெடிக்கல் ஷாப் உரிமையாளரை தாக்கி பேக்குடன் செல்போன்கள் பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தபால் தந்தி நகர் வாசுகி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பெரிய கருப்பன்( 67.). இவர் நரிமேட்டில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம்போல் வியாபாரம் முடித்து இரவு மெடிக்கல் ஷாப்பை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்தனர்.அவர்கள் அவரை தாக்கி அவரிடம் இருந்த பேக்கை பறித்துச் சென்று விட்டனர். அந்த பேக்கில் இரண்டு செல்போன்கள் இருந்தன. இந்த சம்பவம் குறித்து பெரியகருப்பன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

தபால் தந்தி நகரில் கால்வாயில் தவறி விழுந்தவர் பலி:

மதுரை தபால் தந்தி நகரில் கால்வாயில் தவறி விழுந்தவர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒத்தக்கடை பாண்டியன் நகரை சேர்ந்தவர் பால்பாண்டி( 50 ). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர் தபால் தந்தி நகர் பாமா நகர் மெயின் ரோட்டில் கால்வாயில் தவறி விழுந்து இறந்து கிடந்தார். இந்த தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் அவரதே உடலை மீட்டு பிரேதநரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி சதீஷ்வரி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பால் பாண்டியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மதுரை  மேலமடையில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை:

மதுரை  மேலமடை பகுதியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலமடை எழில் நகரை சேர்ந்தவர் அய்யப்பன் மகன் விக்னேஷ்( 27.). இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் கருகிய நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை ஐயப்பன் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் விக்னேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைகை ஆற்றின் தென்கரையில்  வாளுடன் பதுங்கி இருந்த  வாலிபர் கைது:

மதுரை  வைகை ஆற்றின் தென்கரையில் வாளுடன்  பதுங்கி இருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். திலகர் திடல் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வைகைஆற்றின் தென்கரை அனுமார் கோயில் படித்துறை சந்திப்பருகே சென்றபோது சந்தேகப்படும்படியாக போலீசை கண்டதும் பதுங்கிய ஒருவரை பிடித்தனர். அவரை சோதனை செய்தபோது, வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாளை பறிமுதல் செய்து பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மதுரை பாண்டியன் தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார்( 43 )என்று தெரியவந்தது .அவர் குற்றம் செய்யும் நோக்கத்துடன் வாளுடன் பதுங்கி இருந்ததும் விசாரணையில் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News