மதுரை அருகே காங்கிரஸ் கட்சி பிரமுகரின் கார் தீப்பிடித்து சேதம்

மதுரை பெருங்குடி அருகே, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காங்கிரஸ் பிரமுகரின் கார் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு உண்டானது.

Update: 2021-10-21 06:30 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்குடி, சௌராஷ்டிரா காலனியை சேர்ந்தவர் சைமன். இவர் ,தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச் செயலாளர். இவர்,  தனது காரை, வீட்டு அருகே உள்ள ஷெட்டில், நேற்றிரவு நிறுத்தியுள்ளார்.

இன்று காலை,  அங்கு செய்தித்தாள் போட வந்த நபர் காரில் இருந்து புகை வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, கார் சாவியில் உள்ள ரிமோட்டை வைத்து காரை அன்லாக் செய்துள்ளார் சைமன். அப்போது, கார் திடீரென்று தானாக நகர்ந்து அருகே இருந்த முட்புதரில் முட்டி நின்றுள்ளது. மேலும், சாவியை வைத்து காரை திறக்க முற்பட்டபோது, கார் முழுவதுமாக தீப்பற்றி எரிய தொடங்கியது.

தீயை அணைக்க முயற்சி செய்தும் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, அவனியாபுரம் காவல் நிலையத்தில் சைமன் புகார் அளித்தார். வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News